May 24, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் 144 தடை போடப்பட்டிருப்பதால் நேரில் சென்று மக்களை சந்திக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சட்டபேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பேரவை சபாநாயகர் அறையில் கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்கூடத்தில் தாமும் மற்ற அமைச்சர்களும் பங்கேற்று இருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் அலுவல் ஆய்வுக்கூடத்தில் பங்கேற்றிருந்தனர். தம்மை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறவில்லை எனக் கூறினார்.
அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தூத்துக்குடிக்கு ஏன் இதுவரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செல்லவில்லை? ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதலில் சட்டத்தை மதிக்கவேண்டும். தூத்துக்குடியில் 144 தடைச்சட்டம் அமலில் உள்ளது.144 தடைச்சட்டம் அமலில் உள்ள நிலையில் ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்திருக்கிறார்.144 தடை அமலில் உள்ள போது அங்கு கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.