January 23, 2020
கோவை மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் தனது ஊரை தூய்மைபடுத்தும் முயற்சியாக துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டது அந்த ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கோவை தீத்திபாளையம் ஊராட்சிக்கு தலைவராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புல்லட் கந்தசாமி .. தேர்தல் வாக்குறுதியாக பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக தூய்மையான ஊராக தனது மாற்றுவேன் என உறுதியளித்திருந்தார்.இந்நிலையில் தமது வாக்குறுதியை நிறைவேற்றும் தீத்திப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுடன் சென்ற இவர்,நேரடியாக சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார்.இவரது இந்த செயலை பார்த்த ஊர் மக்கள் அவரை வெகுவாக பாராட்டி சென்றனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திலேயே வரி பாக்கியில்லா, பிளாஸ்டிக்கில்லாத ஊராட்சியாக மாற்ற பொது மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், இந்த பகுதியில் குடிநீர் , சாலை வசதி சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக தீத்திபாளையம் ஊராட்சியை விரைவில் மாற்றி காட்டுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
பேட்டி : புல்லட் கந்தசாமி ( தீத்திபாளையம் ஊராட்சி தலைவர் )