January 9, 2020
தண்டோரா குழு
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. நாளையில் இருந்து பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழக அரசுக்கு சிஆர்பிஎப் கடிதம் எழுதியுள்ளது.
ஜெயலலிதா மறைக்குப் பின்னர் முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவு பட்டியலில் இருக்கிறார். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கான இசட் பிரிவு பாதுகாப்பு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், நாளையில் இருந்து அவருக்கான பாதுகாப்பு விலக்கப் படுவதாக சி.ஆர்.பி.எப் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. மேலும், பிற அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் திடீர் விலக்கு?
சமீபத்தில் வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக மத்திய – மாநில அரசுகளின் முடிவுகளின்படி, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கான பாதுகாப்பு படி நிலைகளை குறைப்பது, அதிகரிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படிநிலைகள், குறைப்பது அல்லது கூட்டுவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இத்தகைய முடிவுகளை எடுக்கிறது. தற்போது, ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் அவருக்கான இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.