February 27, 2019 தண்டோரா குழு
தீவிரவாதிகளுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்திய விமானப்படை நேற்று அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக கூறப்டுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ அதிபர் டிரம்புடன் வியட்நாம் நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீவிரவாத தாக்குதல் பற்றி பேசினார். இதில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான நெருங்கிய பாதுகாப்பு உறவை வலியுறுத்தியதுடன், இருதரப்பு பகுதிகளிலும் அமைதி மற்றும் ஸ்திர தன்மையை மேம்படுத்துவதற்கான இலக்கு பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ராணுவ நடவடிக்கைகளை தவிர்த்து, கட்டுப்பாடு காத்து இருநாடுகளுக்கும் இடையே உருவாகியுள்ள பதற்றத்தை தணிக்கும் படி கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சொந்த மண்ணில் உள்ள தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுப்பதோடு, இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் நேரடி தொடர்பில் இருக்க முன்னுரிமை கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.