January 24, 2020
வனத்தில் ஏற்படும் தீயை அணைக்க தீயணைப்பு துறையில் அதிரடிப்படை உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலகத்தில் இன்று அதன் இயக்குனர் சைலேந்திர பாபு ஆய்வு செய்தார்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் 331 தீயணைப்பு நிலையங்கள் உள்ளதாகவும், ஊட்டி மற்றும் ஒக்கேனக்கலில் மீட்பு பணி நிலையங்கள் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஆண்டில் 25 ஆயிரத்தி 400 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் தீ தடுப்பு சம்மந்தமாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தீ விபத்து மற்றும் நீர் நிலைகளில் சிக்கிக்கொண்ட 250 பேரை தீயணைப்பு துறையினர் காப்பாற்றியுள்ளனர். கிணறு மற்றும் நீர் நிலைகளில் சிக்கிக்கொண்ட 1200 மாடுகளை மீட்டுள்ளதாக கூறினார்.இந்திய அளவில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்களுக்கான போட்டியில் 46 பதக்கங்களை பெற்று தமிழகம் முதலிடம் பிடித்ததாக கூறினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புபணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பேர் கொண்ட அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழக வனப்பகுதிகளில் ஏற்படும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையில் உள்ள பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் வனத்தீயை கட்டுப்படுத்த 700 அதிரடிப்படை வீரர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். நேற்று தக்கலையில் ஏற்பட வனத்தீயை தீயணைப்பு அதிரடிப்படை வீரர்கள் தடுத்துள்ளதாக தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் 3600 பள்ளி குழந்தைகளுக்கு , வீட்டில் பாம்பு நுழைந்தால் பிடிக்கவும், தீ விபத்தை தடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த பயிற்சி தேவைப்படுபவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள தீயணைப்பு அலுவலரை அணுகலாம் என்றார்.