October 31, 2018 தண்டோரா குழு
தீபாவளியையொட்டி வருகிற நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை செவ்வாய்கிழமை வருவதால் சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக 5-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்திருந்தது. அதற்கு பதிலாக நவ.10ம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தீபாவளியையொட்டி வருகிற நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தீபாவளியை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் வருகிற 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, 4 நாட்கள் தொடர்ந்து அனைத்து நியாயவிலை கடைகளும் வழக்கம் போல் செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளுக்கு, வழக்கமாக, விடுமுறை நாளான முதல் வெள்ளிக்கிழமை, அதாவது வருகிற 2ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது வெள்ளிக் கிழமையான 16ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை நாளாகும் எனக் கூறப்பட்டுள்ளது.