January 7, 2019 தண்டோரா குழு
திருவாரூர் மக்களின் தேவை “தேறுதல் தான், தேர்தல் அல்ல” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
திருவாரூர் தொகுதிக்கு இந்த மாதம் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால், இன்று திடீரென்று, ‘திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென விதிகளின்படி தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. ஆனால், ‘கஜா’ புயல் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கட்சிகளின் வேண்டுதல்களையும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் களநிலவர அறிக்கையின்படி தேர்தலை ஒத்திவைத்தது வரவேற்கத்தக்கது. திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. புயலுக்குப்பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாரண பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன். திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல, அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதுதான் தேவை, ஓட்டெடுப்பு அல்ல, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.
சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க காட்டிய வேகத்தை நிவாரண பணிகள் செய்வதற்கு வேகம் காட்டவில்லை. டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால், மக்கள் நிவாரணம் பெற வேண்டும் என்பதே கள நிலவரம். டெல்லியிலே தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை ஒத்திவைக்க வழக்கு தொடுத்துவிட்டு இங்கே கூட்டணி கட்சிக்கு திருவாரூரில் ஆதரவு என்று இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல் எல்லாவற்றிக்கும் பாஜகவையும் பிரதமர் மோடியையும் குறை சொல்லும் குரல்கள். ஆனால் போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் நம் களப்பணி நாடாளுமன்ற தேர்தல் நோக்கி தொடரட்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்