February 8, 2019 தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் காண்டூர் கால்வாய் வழியாக இறந்த நிலையில் அடித்து வரப்பட்ட ஆண்யானை குட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அருகே உள்ளது திருமூர்த்தி மலைப்பகுதி. இங்குள்ள பெரும்பாலான வன விலங்குகள் குடிநீர் வேண்டி அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 8 நாட்களாக சின்னத்தம்பி யானை கிருஷ்ணாபுரம், அமராவதி சர்க்கரை ஆலை, கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளது.
இதற்கிடையில்,இன்று அதிகாலை திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய கால்வாயான காண்டூர் கால்வாயில் நீர் குடிக்க வந்த ஆண் யானைகுட்டி ஒன்று நிலை தடுமாறி தவறி அணையில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அணையில் மிதந்து கொண்டிருந்த குட்டி யானையின் சடலத்தை
பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர்.
இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.