March 25, 2019 தண்டோரா குழு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள 40 தொகுதிக்களுக்கான மக்களவை தேர்தலிலும், தமிழகத்தின் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகின்றது. அதற்க்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். மேலும் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை.
இந்நிலையில் இன்று கமல்ஹாசன் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். கமல்ஹாசன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை ஹவுராவிலுள்ள, நபண்ணாவில் சந்தித்தார்.மம்தா பானர்ஜியுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையை மேற்கொண்டார்.
பின்னர் மம்தா பானர்ஜி பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. அந்தமான் நிக்கோபர் தீவில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கிறது. கமல்ஹாசனின் கட்சி அங்கு ஆதரவு அளிக்கிறது என கூறியுள்ளார்.
கமல்ஹாசன் பேசுகையில்,
கூட்டம் நல்லபடியாக முடிந்தது, அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்துள்ளது. எதிர்காலத்திலும் இது தொடரும் என நம்புகிறோம். நான் அங்கு சென்று பிரச்சாரம் செய்ய உள்ளேன்.