June 13, 2018
தண்டோரா குழு
கஞ்சா கடத்திய வழக்கில் திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருணுக்கு ஜூன் 27 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டை சேர்ந்த அதிமுக மகளிர் அணி செயலாளராக இருப்பவர் வளர்மதி.இவரது மகன் அருண்குமார் திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஒ.வாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில்,அருணும் அவரது நண்பர்கள், ஸ்ரீராம்(30),ரவி(43), ஆகியோர் ஆந்திராவில் இருந்து, 251.5 கிலோ கஞ்சாவுடன், ‘டாடா சபாரி’ காரில் வத்தலக்குண்டு வந்துள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த மத்திய நுண்ணறிவு போலீசார் மூன்று நாட்கள் வத்தலக்குண்டு நகரில் தங்கி கண்காணித்து இவர்களை நேற்று கைது செய்தனர்.
இதையடுத்து,அருண் உள்ளிட்ட 3 பேரையும் தேசிய போதைபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று 3பேரும் மதுரை மாவட்ட மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி.பத்மநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது கைது செய்யப்பட்ட 3 பேரையும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.