November 19, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் 7.5 சென்டி மீட்டர் நீளமுள்ள ஊசி கழுத்தில் குத்திய நிலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.
கடந்த 2ம் தேதி கோவை தியாகராய நகர் பகுதியில் இருந்து 19 வயது இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து கழுத்து அறுபட்ட நிலையில்கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.உடனே மருத்துவர்கள் அவரை பரிசோதித்து கழுத்தில் வெளிப்புற காயங்கள் இருந்ததால் முதல் உதவி செய்தனர்.
எனினும்,தொடர்ந்து வலி இருந்ததால் அடுத்து அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது.அதில் 7.5 cm அளவுக்கு நீளமான தையல் ஊசி கழுத்து மூச்சு குழாயில் இருந்து கழுத்து தண்டுப்பகுதியில் மூளைக்கு செல்லும் முக்கியமான ரத்த குழாய் அருகில் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது தானே இந்த ஊசியை கழுத்தில் குத்தி கொண்டதாக ஒப்புக்கொண்டார். இந்த ஊசியானது மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தின் அருகில் இருப்பதால் அறுவை சிகிச்சை மிகவும் சவாலானது. இதனால் நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகும் என்பதால் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
அதற்காக காது,மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள்,ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் அனைவரும் கூடி ஆலோசித்து அந்தப் பெண்ணுக்கு மிகத்துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கழுத்திலிருந்து தண்டுவட எலும்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து மூச்சு குழாயில் இருந்து தண்டுவடத்தின் வழியாக கழுத்தின் பின்புறம் சென்று கொண்டிருந்த ஊசி கண்டறியப்பட்டு மெதுவாக துல்லியமாக வெளியே எடுக்கப்பட்டது.அறுவை சிகிச்சையின் போது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் மற்றும் தண்டுவட பகுதி நரம்புகள் பாதிக்கப்படவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலமாக உள்ளார்.
இது மாதிரியான நீளமான தையல் ஊசி கழுத்தில் குத்தப்பட்டும் கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்காமல் இருந்தது ஒரு அதிசயமே மேலும் அந்த ஊசியை எடுக்கும் முயற்சியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் வெற்றிகரமாக செய்த மருத்துவர்களை மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.