January 9, 2020
தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்துவசனம் இருந்தால் உடனே நீக்கவேண்டும், நீக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் தர்பார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி காசு இருந்தால் சிறைக் கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனத்தை கூறுவார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கவனத்தில் கொண்டுதான் இந்த வசனம் படத்தில் வருவதாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ‘’பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கருத்து நல்ல கருத்துதான். பொதுமக்கள் வரவேற்கக்கூடிய கருத்துதான்” என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில்,
தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இருந்தால் அதை நீக்க வேண்டும்.காவல் துறை அதிகாரி வினய் குமாரும் தனது அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் செல்வது போல் எங்கேயும் குறிப்பிடவில்லை. எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என ரஜினி, ஏ ஆர் முருகதாஸ் ஆகியோருக்கு வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று தெரிவித்துள்ளார். அது போல் ஆதாரம் இல்லாமல் பேசும் ஜெயக்குமார் மீதும் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.