May 29, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி வன்முறைச் சம்பவங்களுக்கும் அங்கு நடைபெற்ற படுகொலைக்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கோவை விமானன நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும்,பிரதமர் மோடியின் கைபாவையாக அதிமுக அரசு செயல்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோதமாக சிவில் ஆடையில் இருந்த போலீசார் ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் பொதுமக்களை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த போலீசாரே தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்தனர் எனவும் குற்றம்சாட்டினார்.
ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைக்கப்பட்டது என தகவல் பரப்பபட்டதாகவும் ஆனால் அங்கு ஒரு சிறு சேதம் கூட கிடையாது எனவும் குறிப்பிட்டதுடன் காவல் துறையினரே வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர் எனவும் ஹிட்லர் பார்லிமென்டிற்கு தீ வைத்து விட்டு கம்யூனிஸ்ட்டுகள் மேல் பழி போட்டது போல தமிழக போலீசார் செயல்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு ஏற்று பதவிவிலக வேண்டும் என தெரிவித்த அவர்,தமிழக அரசு ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான அரசு என்றார்.உச்ச நீதி மன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் அந்த ஆலையை ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம் எனவும் கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம் எனவும் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட்க்கு எதிராக செயல்படுவதால் ஒவ்வொரு தேர்தலிலும் என்னை தோற்க வைக்க அந்த நிறுவனம் பணம் செலவழித்தது எனவும் இதை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது .
மேலும்,ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் பணம் வாங்கிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் மதிமுகவை பற்றியும் என்னை பற்றியும் அவதூறு பேசிவருகின்றனர்.52 கோடி பணம் வாங்கி விட்டதாக பிரபல டி.விக்களின் பெயரில் நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுகின்றனர் எனவும் கூறினார்.இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதையும் நினைவு கூர்ந்தார்.