January 8, 2019 தண்டோரா குழு
விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகிறது என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் இருப்போர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வருவதென்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும், அத்துடன் 10க்கும் அதிக சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டிருப்பதால் அதனை நிர்வகிப்பதற்கு சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனால் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை இருந்துவந்தது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு ஆகியோரின் கோரிக்கையேற்று, விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்தார். விரைவில் உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் எடப்பாடி அறிவித்தார்.
தமிழகத்தில் கடைசியாக அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தின் மாவட்டங்கள் எண்ணிக்கை மொத்தம் 33 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த நிலையை எளிதாக்க தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.