June 5, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இம்மாவட்டங்களில் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்
சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 11 மாவட்டங்கள் தவிர்த்து தளர்வுகள் என்னென்ன?
தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும் .
காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்.
மீன் சந்தைகள் மொத்த விற்பனை சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்கண்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில்வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இபதிவுடன் அனுமதிக்கப்படும்.
எலெக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுதுநீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்.
மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் மட்டும்(விற்பனை நிலையங்கள் அல்ல), காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்.
ஹார்டுவேர் ( பேர் பார்ட்ஸ்) கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
வாகனங்களின் உதிரிபாக விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்.
கல்விப்புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும்(விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்.
வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் பயணிக்க அனுமதிக்கப்படும்.
மேலும் வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டுபயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.