July 18, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகின்றது.
தமிகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு புதிய மாவட்ட செயல்பாட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி, நீண்ட நாட்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து பிரிந்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.