January 29, 2022
தண்டோரா குழு
கோவையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.17.5 லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன்படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. கோவையில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை கோவை 82வது வார்டுக்குட்பட்ட சுங்கம் பைபாஸ் பகுதியில் காரை மறித்து மத்திய மண்டல பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். காரில் 3 பேர் இருந்தனர். அவர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.17.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் கோசுகுறிச்சி பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா ஹமீது (42) என்ற தனியார் நிறுவன ஊழியர், கோவையில் நிலம் வாங்க கிரையம் செய்வதற்காக பணத்துடன் உறவினர்கள் 2 பேருடன் வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் பணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.