November 23, 2019
தண்டோரா குழு
டிசம்பர் 17ம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கோவை வெரைட்டி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
வணிகத்துறை தற்போது கடும் நஷ்டத்தில் உள்ளது. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து வரும் டிசம்பர் 17ம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.மேலும், ஜி எஸ் டியில் வணிகர் சங்கத்தின் கோரிக்கை இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை. உள்நாட்டு வணிகர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
பின்னர் மண்டி விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளது தொடர்பாக கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதி மீது வணிகர்களுக்கு நல்ல மரியாதை உள்ளது என்றும் மண்டி விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி வெளியேறிட வேண்டும் என்று கூறிய அவர், எந்த நடிகராக இருந்தாலும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விளம்பரத்தைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.