December 4, 2018
தண்டோரா குழு
உள்ளூரில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் இல்லையெனில் வெளியூர் சென்று குடித்து வர அரசு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும் என்று குடிமகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மதுவினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் குடிமகன்களோ அதை கண்டுகொள்ளாமல் குடிப்பதற்க்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோட்டை சேர்ந்த குடிமகன் ஒருவர் இலவச பஸ்பாஸ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு வசந்தாபுரத்தை சேர்ந்தவர் செங்கோடையன்(40) விவசாயம் செய்து வருகிறார். நேற்று நடைபெற்ற ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் வித்தியாசமான மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி வேலப்பம்பாளையம் அருகில் டாஸ்மாக் கடை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இங்கு உள்ள விவசாயிகள் கூலி வேலை பார்பவர்கள் வேலை முடிந்தவுடன் மாலையில் மது குடித்துவிட்டு செல்லும் பழக்கம் உடையவர்கள். ஆனால் உள்ளூரில் கடை இல்லாத காரணத்தால் வெளியூர் சென்று குடித்து வர வேண்டிய நிலைஏற்படுகிறது. எங்கள் ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் குடிப்பதற்கு வெளியூர் சென்று வருவதால் போக்குவரத்து செலவு கூடுதலாகிறது. எனவே உள்ளூரில் கட்டப்பட்டுள்ள டாஸ்மாக்கை திறக்க வேண்டும். இல்லையென்றால் குடிமகன்கள் வெளியூர் சென்று குடித்து வர அவர்களுக்கு வசதியாக தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
குறை தீர்ப்பு கூட்டத்தில் இந்த மனுவை படித்து பார்த்த மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செங்கோட்டையன் அளித்த மனுவை மாவட்ட டாஸ்மர்க் அதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி அதிகாரிகள் அவரை அனுப்பிவைத்துள்ளனர்.