March 6, 2019 தண்டோரா குழு
ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பாரோ, அந்த முடிவை தான் எடுத்துள்ளோம் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், என்.ஆர் காங். தலைவர் ரங்கசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவில் மோடியின் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீது எந்த தாக்குதலும் ஏற்படவில்லை. மோடி அரசு அவர்களைப் பத்திரமாக பாதுகாத்தது. தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனம் மோடி குஜராத் மண்ணின் மகத்தான மனிதர். தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் 130 கோடி மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாட்டிற்கு வலுவான தலைவர். தீய சக்திகளை எதிர்கொள்ள வெற்றி கூட்டணியை வைத்துள்ளோம். 10 ஆண்டுகளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது, அவர்களின் குடும்பம் தான் பலன் அடைந்தது. தமிழகமும், மக்களும் பயன்பெறவில்லை. சென்னையில் ராகுலை பிரதமர் என கூறிய ஸ்டாலினுக்கு கொல்கத்தாவில் அதை சொல்ல தைரியமில்லை. பிரதமர் வேட்பாளர் யார் என எதிர்க்கட்சிகளால் சொல்ல முடியுமா?
ஜெயலலிதா மறைந்த போது மத்திய அரசு தோளோடு தோள் கொடுத்தது வரும். தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல். தமிழகத்திற்கு நலன் கிடைக்க வேண்டுமானால், மோடி மீண்டும்பிரதமராக வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பாரோ, அந்த முடிவை தான் எடுத்துள்ளோம். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே சொல்கிறது. இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் நல்லது கிடைக்க மோடி மீ்ண்டும் பிரதமராக வேண்டும். ஓய்வின்றி உழைத்து 40 தொகுதிகளிலும் 21 தொகுதி இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.