June 20, 2019
வரும் 28-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதாக சட்ட பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 2ஆம் தேதி கூடியது. ஜனவரி 4 முதல் 8ஆம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் என சட்ட பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் தெரிவிப்பார்.
தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னதாக வலியுறுத்தியிருந்தார். ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய கூட்டத்தொடர் தாமதமாக 28ம் தேதி துவங்கவுள்ளது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தப்பின் முதல்நாள் கூட்டம் ஒத்திவைக்கப்படும். கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து. கூட்டத்தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை, காவிரியில் நீர் பெருதல், உள்ளாட்சி தேர்தல், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ராஜூவ் காந்தி கொலை குற்றவாளி 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.