November 10, 2018 தண்டோரா குழு
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கணினிகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ரேகடஹள்ளி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 135 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணித ஆசிரியராக மதனகோபால் என்பவர் பணியாற்றி வருகிறார். கல்வியில் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார்ந்த விஷயங்கள் மாணவ மாணவிகள் கற்று கொடுக்க வேண்டும் என்ற அசை இவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மதனகோபால் வீடு கட்ட வங்கியில் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை கொண்டு அவர் வேலை பார்க்கும் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 11 கம்ப்யூட்டர்கள், உபகரணங்கள் மற்றும் நூலகத்திற்கான புத்தகங்களை இலவசமாக வாங்கி தந்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதற்காக தான் இதனைச் செய்ததாக மதனகோபால் தெரிவித்துள்ளார். ஆசிரியர் மதனகோபால் மூலம் கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவை தாங்கள் வளர்த்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். ரேகடஅள்ளி பள்ளி சேர்ந்த மாணவர்கள்.
தற்போது ஆசிரியர் பணி என்பது வியாபாரமாகவும் ஊதியத்திற்காகவும் மாறிவிட்ட இந்த காலத்திலும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக சொந்தப் பணத்தை செலவிட முன்வந்த மதனகோபால் மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இவர் செய்த இந்த செயலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.