August 20, 2018
தண்டோரா குழு
நான்கு ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த 9 ஆயிரம் ரூபாய் பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காகக் கொடுக்க முன்வந்த விழுப்புரம் சிறுமிக்கு, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இலவசமாக சைக்கிளை பரிசளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 327 பேருக்கும் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 2லட்சத்துக்கு மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.இதனால் கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவர், சைக்கிள் வாங்குவதற்காக உண்டியல்களில் கடந்த 4ஆண்டுகளாக பணம் சேர்த்து வந்துள்ளார்.அனுப்பிரியா, அக்டோபர் 16ஆம் தேதியன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், சைக்கிள் வாங்க முடிவு செய்திருந்தார்.
இதற்கிடையில், கேரளா வெள்ளம் குறித்து அறிந்த சிறுமி, தான் சேமித்த பணத்தை நிவாரண நிதியாக வழங்க விரும்புவதாக தந்தையிடம் ஆசையை தெரிவித்தார். இதையடுத்து உண்டியல்களில் இருந்த சுமார் எட்டாயிரம் ரூபாய் பணத்தை சிறுமி தனது தந்தையிடம் ஒப்படைத்தார். பின்னர் அவரது தந்தை சிவசண்முகம் அந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காக வங்கி மூலம் அனுப்பி வைத்துள்ளார்.ஆசை ஆசையாக சைக்கிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை சிறுமி கேரள மக்களுக்காக வழங்கியதை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில் சிறுமி அனுப்பிரியாவுக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக மேலாளருமான பங்கஜ் முன்ஜல் ட்விட்டர் மூலம் அறிவித்தார்.இதையடுத்து, சிறுமி அனுபிரியாவுக்கு ஹீரோ சைக்கிள் நிறுவனம் இன்று புதிய சைக்கிளை வழங்கியுள்ளது.