August 28, 2021
தண்டோரா குழு
கன்னியாகுமரியில் துவங்கி ராஜ்கோட் வரை 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் செல்லும் சைக்கிள் தொடர் பயணம் கோவை வந்தடைந்தது.கோவை வந்த வீர்ர்களுக்கு ரோட்டரி கிளப் ஸ்பெக்ட்ரம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டின் 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக மத்திய காவல் படையை சேர்ந்த 15 வீரர்கள் கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்கோட் வரை ”ஆசாதி க அம்ருத் மஹோத்சவ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு தொடர் சைக்கிள் பயணத்தை துவக்கயுள்ளனர். கடந்த 22ம் தேதி துவங்கிய இந்த தொடர் சைக்கிள் பயணம் ஒவ்வொரு குழுவாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக 2850 கிலோ மீட்டர் பயணம் செய்து, வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று டெல்லி ராஜ்கோட்டை சென்றடையவுள்ளனர்.
இந்நிலையில்,தொடர் சைக்கிள் பயணம் செய்யும் வீரர்கள் கோவை வந்தடைந்தனர். கோவை வந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் ஸ்பெக்ட்ரம் சார்பாக வரவேற்பு விழா நடைபெற்றது.இதில் பயிற்சி மைய ஐ.ஜி. சதீஷ் சந்திர வர்மா வீரர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் தலைவர் பாவிக் முமையா,தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் சீனிவாசன் கலந்து கொண்டார்.விழாவில் நிர்வாகிகள் முரளி பாலகிருஷ்ணன், சம்பத் குமார்,அருள் குமரன்,முத்து குமார்,நிஷித், சுப்ரமணியம் மற்றும் மகேஷ் குமார், செந்தில்நாதன், செல்லராகவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கோவை பயிற்சி மையத்தைச் சேர்ந்த 15 வீரர்கள் பயணத்தை தொடர்ந்தனர்.பயணம் செய்யும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ரோட்டரி கிளப் ஆப் ஸ்பெக்ட்ரம் சார்பில் கோவையில் உள்ள சைக்கிள் குழுக்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சைக்கிள்களில் 30 கிலோ மீட்டர் வரை வீரர்களுடன் உடன் சென்றனர். கோவையில் இருந்து கிளம்பும் இக்குழு அடுத்ததாக கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.