July 17, 2018
தண்டோரா குழு
சென்னையில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் வரும் 31ந் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது மாற்றுதிறனாளி சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அந்த சிறுமியை குடியிருப்பின் காவலாளி மற்றும் வேலையாட்கள் இணைந்து கடந்த 7 மாதங்களாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் குடியிருப்புக் காவலாளிகள்,துப்புரவுத் தொழிலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தி 24 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.இதில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 17 பேர் மீது போஸ்கோ,கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து,இவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில்,நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது போஸ்கோ,பாலியல் வழக்கு விசாரணைகள் தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி நீதிமன்ற அறை பூட்டப்பட்டு 17 பேரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
இதையடுத்து அவர்கள் 17 பேரையும் நீதிமன்றக் காவலில் வரும் 31-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும்,இந்த வழக்கில் 8 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர் தரப்பிலும் ஜாமீன் கோரி எவரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.12வயது சிறுமி தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.