April 9, 2018
தண்டோரா குழு
சென்னை வடபழனியில் மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் பாலகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, வடபழனி, தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், பால கணேஷ், 27; வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில், குருக்களாக உள்ளார். இவரது மனைவி, ஞானபிரியா, 24. கடந்த வாரம் இரவு கணவன் மனைவி இருவரும் உணவு அருந்திவிட்டு தூங்கி விட்டனர் அப்போது வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கழிவறைக்கு செல்ல வந்த போது, பாலகணேஷ் கை கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் கழிவறையில் கிடந்தார். இதையடுத்து, உடனே பாலகணேஷ் மனைவி ஞானபிரியாவுக்கு தகவல் தெரிவிக்க அவர் சென்றார். அப்போது, வீட்டின் படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் ஞானபிரியாவும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்தார்.இதுகுறித்து விஜயலட்சமி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் காயமடைந்த பாலகணேஷை மீட்டு சிகிச்சைக்காக போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து வீடு முழுவதும் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில், நினைவு திரும்பிய பால கணேஷிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ‘நள்ளிரவில், கழிப்பறைக்கு செல்ல வெளியே வந்தேன். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், என் தலையில் தாக்கி, கழிப்பறையில் கட்டி போட்டனர். பின், என் மனைவியையும் தாக்கியுள்ளனர்’ என, பால கணேஷ் கூறினார். எனினும், இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கணவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, நண்பரின் உதவியுடன் மனைவி ஞானப்பிரியாவை கொலை செய்துவிட்டு குருக்கள் பாலகணேஷ் நாடகமாடியது அம்பலமாகியது. மனைவி ஞானப்பிரியாவை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, பாலகணேஷ் கைது செய்யபட்டுள்ளார்.