September 24, 2019 தண்டோரா குழு
செங்கல் சூளை குறித்து வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் 50 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்கி வருவதாக கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கௌரவ தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவை தடாகம் பகுதியில் வனத்தையொட்டிய பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செங்கல் சூளைகளுக்கு செம்மண் எடுக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனயடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களுடன், வருவாய் கோட்டாட்ச்சியர் சுரேஷ் தலைமையில் மாசுகட்டுப்பாட்டுதுறை அதிகாரி, வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் விதிமுறை மீறி செம் மண் எடுக்கப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னையில் இருந்து சிறப்பு குழு வருவதாகவும் விதிமுறைகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் தடாகம் பகுதியில் அனுமதியில்லாமல் செயல்படும் செங்கல் சூளைகளும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதி பெற்று விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனர்.கூட்டத்திற்கு பின்னர், கோவை மாவட்ட செங்கல் சூளை உற்பத்தியாளர் சங்க கௌரவ தலைவர் சி.ஆர்.ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
செங்கல் சூளை குறித்து வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் 50 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் செங்கல் சூளைகள் இருந்து வருகிறது.ஆனால் இந்த 10 ஆண்டுகளாகதான் யானைகள் இந்த வழித்தடங்களில் வெளியேறி வருகிறது. முன்பெல்லாம் காட்டில் விறகு வெட்டுவார்கள்.இப்போது விறகு வெட்டுவதில்லை என்பதால் மரங்கள் அதிகமாகி கொசுக்கள் அதிகமாகி, கொசுக்கடியால் யானைகள் வனத்தில் இருந்து வெளியே வருகின்றன.யானைகள் வெளியே வர அதுதான் காரணம் எனக் கூறினார்.மேலும் அரசு செங்கல் சூளைகளில் மேற்கொள்ள உள்ள ஆய்வுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.