August 18, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னியம்பாளையம், அரசூர், சங்கோதிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னியம்பாளையம் ஊராட்சியில் ரூ.21.55 லட்சம் மதிப்பில் நுண் உரக்கிடங்கு அமைக்கும் பணி, நீலாம்பூர் – சின்னியம்பாளையம் சாலை முதல் மயிலம்பட்டி வரை ரூ.2.19 கோடி மதிப்பில் சாலை மேம்பாடு செய்யும் பணி, அரசூர் ஊராட்சியில் ரூ.70.75 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், தென்னம்பாளையம்-அன்னூர் சாலை வரபிள்ளையார் கோவில் முதல் சங்கோதிபாளையம் சாலை வரை ரூ.37.70 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆட்சியர் ஜல்லி, மணல் மற்றும் கலவைகள் முறையாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதா? என சாலையில் அமர்ந்து தூளையிட்டு பரிசோதித்து பார்த்தார்.அதனைத்தொடர்ந்து சூலூர் விமான நிலையம் விரிவாக்க பணிகள் தொடர்பாகவும் பார்வையிட்டார். பின்னர் மதுக்கரை வட்டம், பிச்சனூர் கிராமத்தில் குமிட்டிபதி ஆற்றின் குறுக்கே ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும், பிள்ளையார்புரம் குறிச்சி பகுதியில் ரூ.1.2கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருவதையும் ஜி.எஸ். சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் (விமான நிலையம்) அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, பொதுப்பணித்துறை(நீர்வள ஆதாரம்) உதவிப்பொறியாளர் சிவகுமார், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.