December 26, 2019 தண்டோரா குழு
சூரிய கிரகணத்தன்று உணவருந்த கூடாது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில் தந்தை பெரியார் படிப்பகத்தில் 50க்கும் மேற்பட்டோர் காலை உணவு அருந்தினர்.
இன்று இந்தியா முழுவதும் வளைய சூரிய கிரகணம் வானில் தென்பட்டது.இந்த கிரகணத்தை காண பல இடங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய கிரகணம் ஆனது ஒரு அரிய நிகழ்வு என்றும் அனைவரும் இதை பாதுகாப்புடன் காணவேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் ஆய்வுகள் பல இருந்தாலும் இன்றும் பல கிராமங்களில் பல மக்களிடையில் மூடநம்பிக்கைகள் புதைந்துள்ளன. கிரகணத்தன்று கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது சூரிய கிரகணம் முடியும் வரை உணவு அருந்தக்கூடாது குழந்தைகள் யாரும் வெளியே வந்து விளையாடக்கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் பரவியுள்ளன. இந்த மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் 50க்கும் மேற்பட்டோர் மூடநம்பிக்கைகளை எதிர்க்கின்ற வகையில் காலை உணவு அருந்தினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயலாளர் கு.இராமகிருட்டிணன்,
இந்த சூரிய கிரகணம் ஆனது அறிவியல் முறைப்படி மிகவும் வியக்கத்தக்க ஒன்று. ஆனால் அதை சில மதவாதிகள் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அதை ஓர் தீய நிகழ்வு என்பது போல் மக்களிடையே சித்தரித்துள்ளனர்.இதைப்பற்றி மூடநம்பிக்கைகள் பலவற்றை மக்களிடையே கூறி மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கடித்து உள்ளன.சூரிய கிரகணத்தன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது குழந்தைகள் வெளியே விளையாடக்கூடாது சூரிய கிரகணம் முடியும் வரை உணவு அருந்தக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் மக்களிடம் பரவலாக இருந்து வருகின்றன.ஆன்மீக ரீதியில் பார்த்தால் கடவுளே இல்லை என்றால் ஒரு அணுவும் அசையாது என்று பலர் கூறும் நிலையில் இந்த சூரிய கிரகணத்தை அன்று கடவுளுக்கே ஆபத்து என்று கூறுவது எவ்வகையில் ஏற்கத்தக்கது என கேள்வி எழுப்பினார். மேலும்,இந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் எதிர்க்கின்ற வகையில் இன்று சூரிய கிரகணம் நடக்கும் போதே உணவருந்தி மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவித்தார்.