July 3, 2019
தண்டோரா குழு
சூயஸ் நிறுவனம் பராமரிப்பு மட்டுமே மேற்கொள்ளும் கட்டணம் மாநகராட்சி தான் வசூலிக்கும் என கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குனார் ஜடாவத் கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குனார் ஜடாவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
4 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்படவுள்ளது. 100 வார்டுகளில் உள்ள மக்கள் தங்களது குறைகளை நேரடியாக வந்து தெரிவிக்கலாம். இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கோவை நகரில் குடிநீர் பிரச்னை என்பதில்லை. 4-6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மழைநீர் சேமிப்பை பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்களை கேட்டுக்கொள்கிறேன். அனைத்து அலுவலகங்களிலும் கட்ட உத்தரவிட்டுள்ளேன்.
புதிதாக வீடு கட்ட மழைநீர் சேமிப்பு அமைப்பில்லாமல் அனுமதி கொடுப்பதில்லை. அதற்காக சிறப்பு குழு ஒவ்வொரு வார்டிலும் 3பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஏற்கனவே உள்ள கட்டிடத்திலும் இந்த அமைப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்யப்படும். ஆகஸ்ட் 15 வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேர குடிநீர் வழங்கவுள்ள சூயஸ் நிறுவனம் 60 வார்டுகளில் தான் உள்ளது. அதற்கான முன்னோட்டமாக தற்போது ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்து வருகிறது.
சூயஸ் திட்டம் எந்தவித பணம் வசூலிக்கப்படுவதில்லை, மாநகராட்சி மூலம் தான் குடிநீருக்கான கட்டணத்தை வசூலிக்கப்படும். பராமரிப்பு மட்டுமே சூயஸ் நிறுவனம் மேற்கொள்ளும். இந்த திட்டம் ஒவ்வொரு வீடுகளிலும் முறையாக மீட்டர் செயல்படுத்த வழிவகுக்கும். மக்கள் ஒரு நாள் முழுவதும் செலவழிக்க வேண்டாம் என்பதால் தான் 8-11 என்ற நேரத்தில் இந்த குறைதீர் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.