May 14, 2018
தண்டோரா குழு
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.,யான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு டில்லி போலீஸ் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.,யான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்.இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த போது மர்மமான உயிரிழந்தார்.அப்போது அவர்,விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இதையடுத்து,சசிதரூர்,ஓட்டல் நிர்வாகம்,சுனந்தாவின் நண்பர்கள்,உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இறப்புக்கான காரணம் குறித்து தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் எப்.பி.ஐ. மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வது இறுதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.இந்த குழு தனது அறிக்கையை சிறப்பு விசாரணை குழுவிடம் அண்மையில் தாக்கல் செய்தது.அதில்,சுனந்தாவின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது பற்றி உறுதி தகவல் எதுவும் கூறப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சிறப்பு விசாரணை குழு எப்.பி.ஐ. மற்றும் எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து இறுதி முடிவை தெரிவிக்கும்படி மருத்துவ குழுவை கேட்டுக் கொண்டது.சுனந்தாவின் போனில் இருந்து நீக்கப்பட்ட உரையாடல்களை பெற்று அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில்,சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.அதில் சுனந்தாவின் கணவரும்,காங்கிரஸ் எம்.பி-யுமான சசிதரூர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சுனந்தாவை சசிதரூர் கொடுமைப்படுத்தியுள்ளதாகவும்,அவரின் தற்கொலைக்கு சசிதரூர் காரணமாக இருந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.சசிதரூர் குற்றவாளி என நீதிமன்றம் சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் டெல்லி போலீஸ் வலியுறுத்தியுள்ளது.
அதில் சுனந்தா புஷ்கரின் மரணம் தற்கொலையே.கொலை அல்ல என்று கூறப்பட்டுள்ளது.சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டுதல்,கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்திய தண்டனைச் சட்டம் 306 மற்றும் 498ஏ கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சுனந்தாவின் தற்கொலைக்கு சசிதரூர் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.