December 9, 2019
தண்டோரா குழு
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்திற்கு அருகில் உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
சீரநாயக்கன் பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியில் உள்ள சமுதாய கூடத்திற்கு அருகில் தனியார் தொலை தொடர்பு நிறுவனம் அமைக்க இருக்கும் உயர்மின் கோபுரத்தால் அருகில் வசிக்க கூடிய குழந்தைகள், கர்பிணி பெண்கள், வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அரசு உத்தரவின் படி குடியிருப்பு பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தான் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும் ஆனால் அப்பகுதியில் போடப்பட்ட உயர்மின் கோபுரமானது வீட்டில் மிக அருகிலேயே போடபட்டுள்ளது என்றும் அதனால் வீட்டின் சுவர் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள்,
இந்த உயர்மின் கோபுரத்தால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலிருந்து வரும் கதிர்வீச்சால் குழந்தைகள், கர்பிணி பெண்கள் பாதிக்கபடுவர்.இது போன்று ஏற்கனவே அப்பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு பொது மக்கள் போராட்டாத்தால் அகற்றப்பட்டது. தற்போது புதிதாக ஒன்று அமைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். எனவே மாவட்ட ஆட்சியர் விரைந்து அந்த உயர்மின் கோபுரத்தை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மனு அளிக்க வந்தவர்கள் உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடியாக பெற முடியாததால் அங்கு வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் போட்டு சென்றனர்.