December 11, 2019
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55வயதான நபரை இயற்கை முறையில் மரணிக்கும் வரையில் சிறையில் அடைக்க ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமத்தில் வசித்து வந்த கூலி தொழிலாலான ஆறுச்சாமி இரு மனைவிகளும் பிரிந்து சென்றதால் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 12 வயது சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் பணிக்கு செல்வதால், தனியாக உள்ள சிறுமியை விளையாடலாம் என்றும், சமைத்து தருவதாக கூறி அவ்வப்போது தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமையில் செய்துள்ளார்.
தொடர்ந்து பல முறை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் , சிறுமிக்கு நடந்த கொடூரமும், 4 மாத கர்ப்பமாக இருந்ததும் பெற்றோர்களுக்கு தெரியவந்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, ஆறுச்சாமியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆறுச்சாமி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையும், அந்த ஆயுள் தண்டனை என்பது ஆறுச்சாமி இயற்கை முறையில் உயிரிழக்கும் வகையில் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரூ.1000 அபராதம் விதித்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை விரைவில் அமல்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த தீர்ப்பின் நகலை இருவருக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.