December 16, 2021
தண்டோரா குழு
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சரவணம்பட்டி பகுதி யமுனா நகரில் இன்று கை,கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 13ம் தேதியன்று அந்த சிறுமி மாயமானதாக அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலானது பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், SFI, DYFI, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் மருத்துவமனை பிரேத பரிசோதனை கட்டிடம் முன்பு திரண்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் தீர்வு கிட்டும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்து கலைந்து சென்று காத்திருக்கின்றனர்.