January 21, 2019 தண்டோரா குழு
சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைவிற்கு பிரதமர் மோடி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் புகழ்பெற்ற மடம் சித்தகங்கா. மடத்தின் ஜீயராக உள்ளவர் சிவகுமார் சுவாமி. கடந்த 1941-ம் ஆண்டிலிருந்து இவர் துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலமானார். அவருக்கு வயது 111.
ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது. மேலும், மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார சுவாமிஜி-யின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், சிவக்குமாரசாமியின் மறைவுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சித்தகங்கா மடத்திற்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமிகளை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சித்தகங்கா மடத்தில் ஏராளமான சமூக பணிகளை செயல்படுத்தி வந்தவர் சிவக்குமாரசாமி என புகழாரம் சூட்டினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைந்தார் என செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் சமுதாயத்திற்காக பல சமூக பணிகளை மேற்கொண்டுள்ளார், கல்விக்காகவும் பெரும் பங்காற்றினார். அவரை இழந்து வாடும் அன்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.