January 11, 2020
கோவை திருச்சி சாலையிலுள்ள சுந்தரேச ஐயர் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் காயத்திரி. இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபல தங்க நகை கடை ஒன்றில் நகை சேமிப்பு திட்டத்தில் தவணை முறையில் பணம் கட்டி வந்துள்ளார். தவணை முடிந்த நிலையில் நேற்று 38.896 கிராம் எடையுள்ள 2,43,617 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை வாங்கியுள்ளார். இதனையடுத்து பெங்களூர் செல்வதற்காக தனது அம்மாவுடன் , இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, நகை வாங்கிய பையை செஞ்சிலுவை சங்கம் முன்பு தவற விட்டுள்ளார்.
சாய்பாபா காலனி பகுதியைச்சேர்ந்தவர் கோபு (37) திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த இவர் 10 வருடத்திற்கு முன் கோவைக்கு பணி நிமித்தமாக வந்துள்ளார். தனியார் ஜவுளி நிறுவனத்தில் முழு நேர ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு செஞ்சிலுவை சங்கம் அருகே வரும்போது, சாலையில் கிடந்த தங்க நகை பையை எடுத்து பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தங்க நகை வாங்கிய பையில் இருந்த ரசீதில் காயத்திரியின் முகவரி மற்றும் செல்போன் எண் இருந்துள்ளது. காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இன்று மாநகர காவல் ஆணையரிடமிருந்து தங்க நகையை காயத்திரி குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். கஷ்டமான சூழலில் கோபு ஆட்டோ ஓட்டி வந்தாலும், நம்முடைய பொருள் காணாமல் போயிருந்தால் என்ன கஷ்டப்படுவோம் என்பதை உணர்ந்ததால்தான், உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.
கோபுவின் நேர்மையை பாராட்டி மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் ஆகியோர் பரிசை வழங்கினர்.