June 21, 2025
தண்டோரா குழு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை ஆதியோகி வளாகத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்று (21/06/2025) யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
நாடு முழுவதும் ஈஷா சார்பில் நடைபெற்ற 2500-க்கும் மேற்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில், 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர் உள்பட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இந்த யோக வகுப்புகள், 11,000-க்கும் மேற்பட்ட யோக வீரா எனும் ஈஷா தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது.
கோவை ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் வெள்ளலூர் அதிவிரைவு படை வீரர்கள், மதுக்கரை 35-வது ரெஜிமெண்ட் மற்றும் சூலூர் 43-வது ரெஜிமெண்டை சேர்ந்த வீரர்கள் என 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.
மேலும் சென்னை ஐ ஐ டி (IIT) வளாகம் மற்றும் ஹெச் டி எப் சி வங்கி, ஐ பி எம் (IBM), கோத்ரேஜ் (Godrej) எச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ், L&T, மற்றும் எஸ் பேங்க் (Yes Bank) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
அதே போன்று பெங்களூருவில் உள்ள சத்குரு சன்னிதியில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை (BSF) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) ஆகியவற்றைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் சில தனியார் நிறுவனங்கள் ஈஷா அறக்கட்டளையுடன் ஒன்றிணைந்து, தமிழகத்தில் கோவை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், பாண்டி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் பிரம்மாண்டமான முறையில் யோக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. இதில் பள்ளி – கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சத்குருவின் யோகா தின செய்தியில், “யோகா என்பது, கட்டாயமான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அடிமையாகாமல், விழிப்புணர்வுடன் கூடிய தேர்வுகளின் மூலம் ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கும் ஒரு அமைப்பு. நீங்கள் விழிப்புணர்வு பெற்று, அந்த கட்டாயத் தன்மையைக் கடந்து செல்லும்போது மட்டுமே, உங்கள் உடல் மற்றும் மன நலனை முழுமையாக உங்களால் தீர்மானிக்க முடியும்.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள புல்மேன் ஹோட்டலில் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” 7 நிமிட தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இலவசமாக வழங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில், சத்குருவால் வடிவமைக்கப்பட்ட எளிய, சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக மூட்டுகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் ‘யோக நமஸ்காரம்’ எனும் பயிற்சி, உடல் மற்றும் உள்நிலையில் சமநிலை அதிகரிக்கும் ‘நாடி சுத்தி’ பயிற்சி மற்றும் மன அமைதி, தெளிவு, கவனத்தை மேம்படுத்தும் ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியானப் பயிற்சியும் வழங்கப்பட்டன.