January 21, 2019 தண்டோரா குழு
சர்ச்சைக்குரிய சித்திரங்களை காட்சிப்படுத்த சென்னை லயோலா கல்லூரி அனுமதித்ததாகக் கூறி பா.ஜ.க.வினர் காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னையின் பழங்கால மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் கிராமிய கலை விழா நடைபெற்றது. அதில் ஓவியக்கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. இதில் மாணவர்களால் சில ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் பெண் செய்தியாளர் கௌரி லங்கேஷ் கொலை, சபரிமலை விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தன.இதில் மோடியை கிண்டல் செய்யும் வகையில் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவர் அமெரிக்காவுக்கு துதி பாடி ஆட்சியை நடத்துகிறார் என கூறுவதைப் போல திரிசூலம் கொண்ட கொடிக்கும், அமெரிக்க கொடிக்கும் இடையே உஞ்சல் கட்டி அதில் அவர் படுத்து உல்லாசமாக உறங்குவது போல கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. மேலும் அம்மன் போன்ற கிரீடம் சூடிய பெண் தெய்வத்தை நோக்கி விந்தணுக்கள் பாய்வது போல சித்திரம் வரையப்பட்டுள்ளது. மீ டூ ஹேஷ்டேக்கை பற்றி சித்திரத்தில் கூற இவ்வாறு வரையப்பட்டுள்ளது.
இந்த ஓவியங்கள் இந்த மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பாஜக சேர்ந்த எச்.ராஜா மற்றும் பாஜக பிரமுகர்கள் உள்ளிடோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து லயோலா கல்லூரி மீது நடவடிக்கை கோரி பா.ஜ.க.வின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர். இந்நிலையில், நிலமை தீவிரமாவதை உணர்ந்து லயோலா கல்லூரி நிர்வாகம் ஓவியக்கண்காட்சி குறித்து மன்னிப்பு கேட்டுஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கண்காட்சியில் இடம்பெறும் சித்திரங்கள் குறித்து தங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும் தாங்கள் அளித்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த ஓவியங்கள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் லயோலா நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கிடையில், லயோலா கல்லூரியில் நடைபெற்ற கிராமிய கலை விழா, மோசமான சித்திரங்கள் இடம் பெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜ., தமிழக மாநிலத் தலைவர் தமிழசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.