• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்க்கரை மானியம் ரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் – மு.க. ஸ்டாலின்

February 3, 2017 தண்டோரா குழு

“மத்திய அரசு சர்க்கரைக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி சட்டப்பேரவை தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“மாநில அரசுகளுக்கு சர்க்கரைக்கு வழங்கும் மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விடும் என்று வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு சர்க்கரை வழங்கும் திட்டத்திற்கு எதிர்காலத்தில் ஆபத்து நேரிடும்.

சர்க்கரை மானியம் ரத்து என ஆரம்பித்து, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்த ஆபத்து ஏற்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு “பொது விநியோகம்” எட்டாக் கனியாக ஆகிவிடக்கூடாது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை வழங்கப்பட வேண்டும். தற்போதுள்ள நடைமுறையின்படி, மாதத்திற்கு 35 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகப்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஒரு கிலோ ரூ.13.50 என வழங்கப்படுவதால், மத்திய அரசு ஒரு கிலோவிற்கு ரூ. 18.50 என்ற மானியத்தை மாநில அரசுக்கு வழங்குகிறது. இப்போது இந்த மானியத் தொகையைத்தான் மத்திய அரசு ரத்து செய்யப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த சர்க்கரை மானிய இழப்பு குறித்து இதுவரை தமிழக அரசு வாய் திறக்காமல் இருப்பது மர்மமாக உள்ளது. மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய மானியம் பறிபோகும் சூழ்நிலையில் கூட முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமைதி காப்பது பெரும் கவலையளிக்கிறது. மத்திய அரசு சர்க்கரை மானியத்தை ரத்து செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த அதிமுக அரசு அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் இந்த முடிவினால் பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை விலையை ஏற்றியோ, சர்க்கரையின் அளவை குறைத்தோ வழங்கி பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது. சர்க்கரைக்கு இதுவரை வழங்கி வந்த மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க