June 28, 2019 தண்டோரா குழு
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தமாட்டோம் என
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு, இன்று காலை சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது.அப்போது, சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,முன்னாள் எம்எல்ஏக்கள் 8பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின்,
சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம்; அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை.சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திமுக திரும்ப பெற்றது.
குடிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் தான் இன்று தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.