June 2, 2018
தண்டோரா குழு
சட்டப்பேரவை கூட்டத்தில் திங்கள் முதல் மீண்டும் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதா? அல்லது பங்கேற்பதா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அப்போது, இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டபேரவை கூட்டத்தொடரில் திங்கள் முதல் மீண்டும் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது. மேலும், ஜூன் 5, 8, 12-ல் திமுக நடத்த இருந்த மாதிரி பேரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை,
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாட தீர்மானம்.
ஜூன் 12-ம் தேதிக்குள் மேட்டூர் அணையில் இருந்து நீரை திறக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
சட்டசபை கூட்டத்தொடரில் திங்கள் முதல் மீண்டும் பங்கேற்பது பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.