March 7, 2019 தண்டோரா குழு
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பாக கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் உள்ள பிரபல கல்லூரிகளில் ஒன்றான ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் கடந்த ஓராண்டிற்கு மேலாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பீளமேடு நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் சோதனையை துவங்கினர்.
நேற்று இரவு வரை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் சில கிடைக்கப் பெறாததால் ஒரே ஒரு அதிகாரியை மட்டும் கல்லூரியில் தங்க வைத்த வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் மீண்டும் சோதனையை துவங்கியுள்ளனர். ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமாக கோவை பொள்ளாச்சி சாலை மலுமிச்சம்பட்டி பகுதியில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மற்றும் ஹிந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி இதேபோல் உடையாம்பாளையம் பகுதியில் ஹிந்துஸ்தான் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் நவ இந்தியா பகுதியிலுள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன செயலர் மற்றும் அறங்காவலர் அலுவலகம் ஆகியவற்றில் மற்றும் சோதனையானது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள சோதனையில் கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பல ஆவணங்களை அகிகாரிகள் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரித்துறை சோதனை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் கல்லூரி வழக்கம் போலவே செயல்பட்டு வருகிறது.