January 26, 2021
தண்டோரா குழு
நாட்டின் 72 – வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர் 140 போலீசாருக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் 72 -வது குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் இன்று செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 8மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி வ.உ.சி மைதானம் வந்தார். அவருக்கு காவல் துறை சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பேண்ட் வாத்தியம் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனத்தில் ஏறி ஊர்வலம்மாக மைதானத்தை சுற்றி வந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.
பிறகு ஆயுதப்படை போலீசார், என்.சி.சி மாணவர்கள், ஊர்க்காவல் படையினர் தங்களுடைய பரேடு அணிவகுப்பை நடத்தி காட்டினர். மாவட்ட கலெக்டர் அதை ஏற்றுக்கொண்டார். பிறகு தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 140 காவலர்களுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காவலர்கள் அணிவகுத்து வந்து மைதானத்தில் வரிசைப்படி நின்றனர். அவர்களுக்கு ஒவ்வொருவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து மாவட்ட கலெக்டர் அவர்கள் முதலமைச்சர் விருதை வழங்கி கௌரவப்படுத்தினார்.
கொரோனா காரணமாக வரக்கூடிய அனைத்து அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, வாசலிலேயே புதிய மாஸ்க் வழங்கப்பட்டது. சனிடைசர் பயன்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கைகள் தள்ளித்தள்ளி போடப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர கமிஷனர் சுமித் சரண், கோவை மாநகர துணை ஆணையர்கள் ஸ்டாலின், முத்தரசு, உமா, குணசேகரன், மற்றும் டி.ஐ.ஜி நரேந்திர நாயர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு, சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம், சிறைத்துறை சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.