May 24, 2018
தண்டோரா குழு
நிபா வைரஸ் நோய் கேரளாவில் வவ்வால்கள் காரணமாக பரவிவருவதால், கோவையில் உள்ள வ உ சி உயிரியல் பூங்காவில் அதிகளவிலான வவ்வால்கள் இருப்பதன் காரணமாக, பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் கீழே கிடக்கும் பழங்களை எடுத்து உண்ண வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் நோய் தாக்குதலின் காரணமாக சிலர் உயிரிழந்து உள்ள சூழலில்,கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,நிபா வைரஸ் வவ்வால்களின் சிறுநீரிலும்,எச்சம் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது, இதன் மூலம் காய்ச்சல்,கடுமையான தலைவலி,மயக்கம்,மனக்குழப்பம் போன்றவை ஏற்பட்டு மூளை காய்ச்சலாக மாறி உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இதற்கு மூலக் காரணமாக இருக்கும் வவ்வால்கள்,கோவையில் உள்ள வஉசி உயிரியல் பூங்காவில் ஏராளமானது உள்ளது என்பதால் அங்கு மாநகராட்சியினர் அவ்வப்பொழுது தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் அங்கு வரும் பொதுமக்கள் கீழே கிடக்கும் எந்த பழங்களையும் எடுத்து உண்ண வேண்டாம் என மாநகராட்சியின் சுகாதார அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அப்பகுதியில் அமர்ந்து உணவு உட்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிபா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக சுகாதாரத்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,கேரளாவில் இருந்து பழக்கழிவுகளை கொண்டு வரும் லாரிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.