January 8, 2019 தண்டோரா குழு
கோயம்புத்தூர் விழாவின் முக்கியமான நிகழ்வான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திருவிழா ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் கொடிசியாவில் நடைபெற்றது.
கோவை, நீலகிரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் திறன்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி. ஜனவரி 7 திங்கட்கிழமை இந்தக் கண்காட்சியில் பங்கு பெற்ற மாணவர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளிகளுக்கு மூன்று பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. 6 முதல் 8 ஆம் வகுப்பு பிரிவில் சிவா நிகேதன் பள்ளி லக்ஷனா மற்றும் குழுவினர் முதலிடம் பெற்றனர். இரண்டாம் இடம் பண்ணரி அம்மன் பப்ளிக் பள்ளி ஹேமாஸ்ரீ மற்றும் குழுவினர், மூன்றாம் இடத்தினை கோயம்புத்தூர் பப்ளிக் பள்ளி ஜென்னீஷ் மற்றும் குழுவினர் பிடித்தனர்.
9 முதல் 10-ஆம் வகுப்பு பிரிவில் முதல் இடம் மருது பாண்டியன் மற்றும் குழுவினர் யுவ பாரதி பப்ளிக் பள்ளி, இரண்டாம் இடம் எஸ்.ராகுல் சிவா நிகேதன் பள்ளி, மூன்றாம் இடம் ஆர்.திருமூர்த்தி , அரசினர் மேல்நிலைப்பள்ளி வென்றனர். 11 முதல் 12-ம் வகுப்புப் பிரிவில் முதல் இடம் ஆதித்யா மற்றும் குழுவினர் சி.எஸ். அகாடெமி, இரண்டாம் இடம் கைலாஷ் மற்றும் டீம் கார்மல் கார்டன், மூன்றாம் இடம் சதீஷ் மற்றும் குழுவினர், சுந்தரராஜா வித்யாலயா பள்ளி வென்றனர்.
கல்லூரி அளவிலான பிரிவில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிவேதா மற்றும் கவுதம் முதலிடமும், எஸ்.எஸ்.என் கல்லூரி இரண்டாம் இடமும், சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரி மூன்றாம் இடமும் பிடித்தது. சிறந்த காட்சிப்படுத்தியதற்கான விருது ஈசா கல்லூரிக்கு வழங்கப்பட்டது. பள்ளி கல்லூரி பிரிவில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு முப்பதாயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு இருபதாயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த அணிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த கண்டுபிடிப்புப் பரிசாக பத்தாயிரம் ரூபாய் எஸ்.என்.எஸ் பள்ளி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு கிடைத்தது. சிறப்பாக காட்சிப்படுத்தியமைக்கான பரிசு தருண் மற்றும் குழுவினர், சி.எஸ். அகாடெமி பள்ளிக்கு கிடைத்தது. இந்தக் கண்காட்சியில் ரோபாட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையிலான திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இது குறித்து கோயம்புத்தூர் விழா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா கூறும்போது,
வெற்றி, தோல்வி, பரிசு போன்றவற்றை விட பங்களிப்பே மிகச்சிறப்பானது. மாணவர்களுடைய ஆர்வத்தைக் கண்ட போது இது போன்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்த வேண்டும் என்ற ஊக்கம் உண்டாகின்றது என்றார்.
பரிசளிப்பு விழாவில் பேசிய இஸ்ரோவில் பணியாற்றும் டாக்டர் கிருஷ்ணன்,
அனைத்து பள்ளிக் கல்லூரிகளிலும் அறிவியல் திட்டங்களை மாணவர்களுக்கு தனித்தனியாக செய்யச் சொல்கின்றனர். ஆனால் அறிவியல் என்பது பற்பல மூளைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளாகவே அறிவியல் தோன்றும். அறிவியல் என்பது கூட்டு முயற்சி. அதனால் தான் இஸ்ரோ மட்டும் எப்போதும் மாணவர்களிடையே தனித்து தெரிகின்றது. அதுவே இஸ்ரோவின் பலம் என கூறினார்.