December 21, 2020
தண்டோரா குழு
கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீஃப்பை விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீஃப்பை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அமலாக்கத்துறை (ED) கைது செய்ததை கண்டித்து கோவையில் இன்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்திய அமைப்பினர் கோவை மாவட்ட தலைவர் K.முஹம்மது அசாருதீன் தலைமையில் மாவட்ட செயலாளர் அபுதாஹீர் முன்னிலையில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக இதில் பொதுச் செயலாளர் k.அஸ்ரப் கலந்துகொண்டார்.
அப்பொழுது அவர் பேசுகையில்,
அண்மையில், சங்க பரிவாரின் சித்தாந்தங்களை எதிர்க்கும் கருத்தாளர்களையும், அரசியல் எதிரிகளையும், மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடும் நபர்களையும் வேட்டையாட மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருகிறது. அரசு நிறுவனங்கள் சங்க் பரிவாரின் சிப்பாய்களாக மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு ஜனநாயகத்தை விரும்பும் அனைவருக்கும் உண்டு.
ரவூப் ஷரீஃப் கைது செய்யப்பட்ட பின்னர் அவரின் வீட்டில் ED யால் நடத்தப்பட்ட சோதனையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளபோதும், சட்டப்புறம்பான முறையில் கைது செய்திருப்பது என்பது CAA-NRC க்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்காக கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் CAA-NRC யை அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக சங்க்பரிவாரை எதிர்க்கும் தலைவர்களையும், இயக்கங்களையும் அச்சுறுத்துவதற்கான பாஜகவின் நடவடிக்கையாகும்.
CAA-NRCக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை குறிவைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். ஆகவே உடனடியாக கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீபை விடுவிக்க வேண்டும் என்றார்.