January 30, 2020
தண்டோரா குழு
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் செண்டர் மீடியனில் ஏறி நின்ற தனியார் பேருந்து. தனியார் கம்பெனி ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து கேஸ்கம்பெனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் இன்று காலை 8 மணியளவில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. கேஸ்கம்பெனி அருகே வரும்போது, முன்னால் சென்று கொண்டு இருந்த டூவிலரை முந்த முயன்றபோது கண் இமைக்கும் நேரத்தில் சாலையின் நடுவிலுள்ள சென்டர் மீடியனில் பேருந்து ஏறி நின்றது. மேலும் பேருந்து முன்னால் சென்ற டூவிலர் மீதும் மோதியது. டூவிலர் ஓட்டி வந்த சின்னதடாகத்தை சேர்ந்த சந்தரசேகர் என்பவர் பேருந்து மோதியதில் அடிப்பட்டு கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் அவர் தப்பினார். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
பேருந்தின் முன் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. ஆனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த நிலையில் அந்த வழியாக சென்று கொண்டு இருந்த பொதுமக்கள் திடீரேன பேருந்து டிரைவரை அடிக்க முயன்றனர். அதற்குள் டிரைவர் தப்பி ஓடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அடிப்பட்டு கிடந்த சந்தரசேகரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது,
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சில தனியார் பேருந்துகள் தினமும் வேகமாக செல்கின்றனர். சாலையில் செல்பவர்களை அவர்கள் மதிப்பதில்லை. இதுகுறித்து மாவட்ட போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதனால் காலையில் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.