March 4, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மீது மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளராக குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவரும் அவருடைய நண்பரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர் அப்போது ஆனந்த் கோவை ராமநாதபுரம் பகுதியை கடந்து குறிச்சி செல்வதற்காக நஞ்சுண்டாபுரம் வழியாக சென்றனர்.அப்போது அங்கு உள்ள ஒரு பாலத்தின் கீழ் சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆனந்தை இரும்புக்கம்பியால் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.
இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக அவருடைய நண்பர் ஹரி என்பவருக்கு போன் செய்து நடந்ததை கூறினான். அதனைத் தொடர்ந்து அவருடைய நண்பர் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு மொத்தம் 20 தையல்கள் போடப்பட்டது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் வழிகள் அனைத்தும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவம் நிகழாவண்ணம் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்டி மருத்துவமனைக்கு தற்போது ஆனந்த் மாற்றப்பட்டுள்ளார். இதனால் இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் பிஎஸ்ஜி மருத்துவமனை சென்றுள்ளனர்.
மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் ரத்தப் போக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதாலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.