December 29, 2020
தண்டோரா குழு
கோவையில் அதிமுகவினரை கொண்டு பொங்கல் டோக்கன் வழங்கப்படுவதை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திமுகவினர் இன்று திடீரென முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன், பையா கவுண்டர், சேனாதிபதி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த திமுகவினர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழகந்தனர்.200 க்கும் மேற்பட்ட திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்ததை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் கதவுகள் மூடப்பட்டது.
இதனையடுத்து ஆவேசமடைந்த திமுகவினர் ஆட்சியர் அலுவலக கதவுகளை சத்தமாக தட்டி, கதவு திறந்து உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தமிழக அரசையும், அதிமுகவையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருடன் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் திமுகவினர் தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த படி இருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என தெரிவித்த காவல்துறையினர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் திமுக நிர்வாகிகளை அழைத்து சென்றனர்.அவரிடம் கோரிக்கைகள் குறித்த மனுவினை வழங்கிய திமுக நிர்வாகிகள் , போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முற்றுகைப் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்துக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
இது தொடர்பாக பேசிய கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன்,
பொங்கல் டோக்கனை அதிமுகவினரே வழங்குகின்றனர், அதிமுகவினரள டோக்கன் அடித்து விநியோகம் செய்கின்றனர் எனவும், இதை தடுக்க வேண்டிய காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் அமைதியாக இருக்கின்றது எனவும்,இது மோசமாக முன் உதாரணம் என தெரிவித்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்திரவு காரணமாக அதிமுகவினர் இப்படி செய்வதாகவும்,உடனடியாக இதை தடுக்காவிட்டால் நாளை கோவை மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இந்த டோக்கன் விநியோகம் மாவட்ட ஆட்சி தலைவருக்கு தெரிந்தே நடைபெறுகின்றது எனவும், ஆட்சியரிடம் முறையிட வந்தால் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டு இருக்கின்றது எனவும்,காவல் துறை அதிமுகவின் கைகூலி தனமாக செயல்படுகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.
அதிமுகவினர் டோக்கன் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.