March 1, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 723 மாணவ, மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் இராசாமணி பார்வையிட்டார்.
தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இன்று முதல் வருகின்ற 19 ம் தேதி வரை தேர்வுகள்
நடைபெறுகின்றன. இன்று தமிழ் மொழிப்பாடத்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 116 மையங்களில் நடைபெறும் தேர்வில் 348 பள்ளிகளில் இருந்து 35 ஆயிரத்து 723 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாற்று திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு 208 ஸ்கிரைபுகளும் நியமிப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஆர்.கே.ஸ்ரீ.ரங்கம்மாள் பள்ளியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்காக அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மாணவர்கள் சிரமமின்றி எழுதுவதற்காக சரியான நேரத்தில் பேருந்து வசதி, மையங்களில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.